தமிழ் சங்கத்தின் தலைவர் சிவ பெருமான் தமிழின் அடையாளம் மீனாட்சி அம்மன்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் புகழாரம்
மதுரை: ''தமிழ் சங்கத்தின் தலைவர் சிவ பெருமான்; தமிழின் அடையாளம் மீனாட்சி அம்மன்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில், நேற்று அவர் கூறியதாவது:
தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜயை, தி.மு.க., - -எம்.பி., ராஜா ஒருமையில் பேசி, வசை பாடியதை கண்டிக்கிறோம். தி.மு.க.,வினரின் இந்த போக்கை, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும். அன்னை மீனாட்சி அம்மனே, தமிழின் அடையாளம் தான்; தமிழ் சங்கத்தின் தலைவரே, சிவ பெருமான் தான். எனவே, கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த என்ன தயக்கம்?
சென்னை -பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் முயற்சியை கைவிடுமாறு, அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் உணர்வுகளை மதித்து, அதற்கேற்ப த.ெவ.க.,அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், திருமாவளவன் அளித்த பேட்டி:
தி.மு.க.,வுக்கு ஆதரவான, சில இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்கள், எங்களை துரோகி பட்டம் கட்டி விமர்சிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அப்படி பேசுவதால், தி.மு.க., தன்னை சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோணத்தில் என் கருத்துக்களை கூறினேன்.
நாங்கள், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் எப்படி உருவானது என்பதற்காகவே கருத்து தெரிவித்தேன்; குற்றம் சாட்டுவது எங்கள் நோக்கமல்ல.
தி.மு.க.,வின் கொள்கை தலைவர்கள், தங்கள் எதிரிகளை எப்போதுமே நாகரிகமாகத்தான் எதிர் கொண்டனர்; ஒருபோதும் வரம்பை மீறியது கிடையாது.
ஆனால், தற்போதைய தி.மு.க.,வினர், அக்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றனர். இது, அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.