புதிய தலைமை செயலக திட்டம்: திமுக
சென்னை: ''புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு பதிலாக, ஏற்கனவே ஓமந்துாரார் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்தலாம்,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: த.வெ.க., குதிரை பேரம் நடத்தியதன் விளைவாக, இன்று இடைதேர்தல் வந்துள்ளது. இவர்கள் தான் மக்களுக்கு 'நேர்மையான அரசியலை தரப் போகிறோம்' என்று சொன்னவர்கள். உண்மையில் இடைத்தேர்தல் முற்றிலும் அவசியமற்றது.
தமிழகம் முழுதும் கொலை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. அதற்கு முதல்வர் பதில் அளிப்பார் என எதிர்பார்த்தால், சினிமா போல், 'பஞ்ச்' வசனங்களை பேசுவதும், இல்லாத பொய்களை அரங்கேற்றுவதுமாக இருக்கிறார்.
த.வெ.க.,வினர், இருக்கிற தலைமை செயலகத்தில், ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும்; அதன் பின், புதிய சட்டசபை பற்றி சிந்திக்கலாம். தலைமை செயலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், சென்னை ஓமந்துாரார் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்தலாம். தற்போது அது மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருந்தாலும், தலைமை செயலகத்திற்கு என கட்டப்பட்ட இடம் என்பதால், அதை மீண்டும் பயன்படுத்தலாம்.
எதை கேட்டாலும் நிதி இல்லை என்று கூறும் த.வெ.க., ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க அனைத்து வழிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஸ்டாலினை, சட்டசபையில் முதல்வர் விஜய் உருவ கேலி செய்ததை ஏற்க முடியாது.
த.வெ.க., நடத்திய குதிரை பேரம் காரணமாக, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.
தே.ஜ., கூட்டணியில் போட்டியிட்டு வென்ற பின், தங்கள் பதவியை ராஜினாமா செய்தவர்கள் த.வெ.க.,வில் இணைந்தனர்; அவர்களே மீண்டும் த.வெ.க., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
'இந்த தேர்தல் அவசியமா' என, மக்கள் கேள்வி கேட்க வேண்டும். இந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்; அதற்கு, பா.ஜ., துணையாக இருக்கும்.
டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடமே, 900 கோடி ரூபாயில் தான் கட்டப்பட்டது. ஆனால், சென்னை பட்டினப்பாக்கத்தில், 1,200 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமை செயலகம் அமைக்க, த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது; இதன் வாயிலாக, திட்டமிட்டே மிகப்பெரிய ஒரு ஊழலுக்கு வழிவகுத்துள்ளது. முதல்வர் வீட்டின் அருகிலேயே தலைமை செயலகம் கட்ட தேவை என்ன?
த.வெ.க., தலைமையிலான கூட்டணியை, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்கின்றனர்; இது, மிகப்பெரிய பொய். சபாநாயகரும், நிதி அமைச்சரும், பைபிள் வசனங்களை பேசுகின்றனர்.
முதல்வர் விஜய், கிறிஸ்துவர்களுக்கு மட்டும் தான் முதல்வரா; ஒரு மதத்தை மட்டுமே சார்ந்து பேசி வரும்போது, மதச்சார்பற்ற கூட்டணி என எப்படி ஏற்றுக்கொள்வது? இவ்வாறு அவர் கூறினார்.