பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்காத த.வெ.க.,: காங்கிரசுக்குள் மோதிக் கொள்ளும் தலைவர்கள்
சென்னை: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக ஏற்காத த.வெ.க., விடம், கூட்டணி எதற்கு என, காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால், 'கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகை யார்' என, காங்., ராஜ்யசபா எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி பதிலடி கொடுத்ததால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சியில் சலசலப்பை உருவாகி உள்ளது.
வரும் 2029 லோக்சபா தேர்தலில், முதல்வர் விஜயை பிரதமர் வேட்பாளர் என, த.வெ.க., அமைச்சர்களும், நிர்வாகிகளும் பேசி வருகின்றனர். த.வெ.க., அமைச்சரவையில், காங்., இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ''ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்,'' என்றார்.
'ராகுலை பிரதமர் வேட்பாளராக த.வெக., ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என, அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்தார். பின் இரு தரப்பும் பேசி சமாதானமானது.
சமீபத்தில், முதல்வர் விஜய் தலைமையில் உருவான, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் காங்., இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, ''ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால், கூட்டணியில் இருக்க என்ன வாய்ப்பு உள்ளது. ராகுலை பிரதமர் வேட்பாளராக வெளிப்படையாக, நேர்மையாக ஏற்பவர்களோடு கூட்டணி வைப்பதே நேர்மை,'' என்றார்.
இதுகுறித்த கேள்விக்கு பிரவின் சக்கரவர்த்தி அளித்த பதில்:கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகை யார்; அவர் கடந்த காலத்தில் கட்சியில் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இப்போது அது முக்கியமே இல்லை. மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் நாங்கள் பங்கு பெற்றுள்ளோம். காங்கிரசுக்கு மதிப்பு, மரியாதை, அரசியல் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான கருத்து மோதல், கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.