நிலத்தை விற்கும் திட்டத்திற்கு $2 பி. வரி தடையில்லை
பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரில் உள்ள 16.6 ஹெக்டேர் நிலத்தை விற்கும் திட்டத்திற்கு $2 பில்லியனுக்கும் அதிகமான வரித் தொகை தடையாக இருப்பதாகக் கூறும் புளூம்பெர்க் (Bloomberg) அறிக்கையை ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அந்தத் தொகையைச் செலுத்தத் தான் தயாராக இருப்பதாகப் பட்டத்து இளவரசர் கூறினார்.
“வழக்கமான வரி செலுத்துவோர் என்ற வகையில் இது இயல்பான ஒன்றுதான். இதில் எவ்விதச் சிக்கல்களும் இல்லை. மேலும் இரு நாடுகளுக்கும் பங்களிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
வரியை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் அவர் ‘எக்ஸ்’ தளத்தில் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
இந்த நில விற்பனைக்கு S$2 பில்லியனுக்கும் அதிகமான நில மேம்பாட்டுக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், இது இளவரசருக்கும் நிலத்தை வாங்க முன்வருபவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக இருப்பதாகவும் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது.
நிலத்தின் மதிப்பை உயர்த்தும் வகையிலான திட்டமிடுதல் அல்லது பிற ஒப்புதல்களைச் சிங்கப்பூர் வழங்கும் போது இந்த வரி விதிக்கப்படுகிறது.
அத்துடன் நில மேம்பாட்டின் மூலம் கிடைக்கும் பொருளியல் பலன்கள் உள்ளூர்ச் சமூகத்திற்குச் சென்று சேருவதை உறுதி செய்யவும் இது முற்படுகிறது.
தொடர்புடைய 16.6 ஹெக்டேர் நிலத்தில், 2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கத்துடனான நிலப் பரிமாற்றத்தின் மூலம் துங்கு இஸ்மாயில் பெற்ற ஒரு நிலப்பகுதியும் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மார்ச் மாதத்தில் சிங்கப்பூரின் நகர மறுமேம்பாட்டு ஆணையம் கூறுகையில், ‘குட் கிளாஸ் பங்களோ’ (Good Class Bungalows) என அழைக்கப்படும் மாளிகைகளையும் குறைந்த உயரம் கொண்ட வீடுகளையும் கட்டுவதற்காக இந்த நிலத்தை மேம்படுத்த ஜோகூர் இளவரசர் விண்ணப்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலம் குடியிருப்புப் பயன்பாட்டிற்காக மறுவரையறை செய்யப்பட்டவுடன், அதன் மதிப்பு S$3.8 பில்லியன் முதல் S$4.7 பில்லியன் வரை இருக்கலாம் என்று சொத்து சந்தை ஆய்வாளர் நிக்கோலஸ் மாக் மதிப்பிட்டுள்ளார்.