📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 08:08 PM

நாமக்கல்: விபத்தில் 4 மாணவிகள் பலி

நாமக்கல்: விபத்தில் 4 மாணவிகள் பலி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக கல்லூரி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதியின் மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா(17), 7ம் வகுப்பு படிக்கும் தனுஸ்ரீ(13), 6ம் வகுப்பு படிக்கும் அபிநயா(12).

எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் (சித்தப்பா ரமேஷ்பாபு மகள்) சுபிதா என்ற கலைச்செல்வி (19) தினமும் பள்ளிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம்.

விபத்து - 4 மாணவிகள் பலி

அந்த வகையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்வி பின்னர் இருசக்கர வாகனத்தில் 3 பேரையும் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

ராசிபுரம்–திருச்செங்கோடு சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பிரிவு சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி, அபிநயா உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே நிவேதாவும், தனுஸ்ரீவும் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த கோர விபத்தில் ஒருகுடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நாமக்கல் விபத்தில் 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி பஸ் டிரைவர் பிரவீனை (வயது 23) போலீசார் இன்று கைது செய்தனர்.

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி பஸ் டிரைவர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.