மேற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை: 'நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், நேற்று காலை வரை, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், திருச்சியில், 8.7 செ.மீ., மழை பதிவானது. அதேசமயம், பல இடங்களில், இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரித்தது. தற்போது, தெற்கு உள் கர்நாடகா முதல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
அதனால், இன்று, மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருப்பத்துார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில், சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.