வைபவ் சூர்யவன்ஷி கை கலப்பில் ஈடுபட கூடாது.. சச்சினை பார்த்து கத்துக்கோங்க.. வசீம் ஜாபர் அறிவுரை
வைபவ் சூர்யவன்ஷி கை கலப்பில் ஈடுபட கூடாது.. சச்சினை பார்த்து கத்துக்கோங்க.. வசீம் ஜாபர் அறிவுரை
மும்பை: 2026 முத்தரப்பு 'ஏ’ தொடரின் போது வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய ஏ அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். அண்மையில் இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, வைபவ் சூர்யவன்ஷிக்கும் விஷென் ஹலம்பகவிற்கும் இடையே ஆட்டம் முடிந்த பின் கடுமையான மோதல் ஏற்பட்டது.
சூப்பர் ஓவரில் இந்திய ஏ அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை வீரர்கள் தங்களது வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது ஹலம்பகே, சூர்யவன்ஷியை வம்பிழுத்ததாகக் கூறப்படுகிறது, இதனால் ஆத்திரமடைந்த இந்திய ஏ அணி பேட்டர் சூர்யவன்ஷி அவரைத் தள்ளிவிட்டார். இந்த விவகாரம் கைக்கலப்பாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கைகலப்பில் ஈடுபடக் கூடாது
"வைபவ் இதை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடி வருகிறார். அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்துள்ளதால், மக்கள் அவரை வம்பிழுக்கவும் அவருக்கு எதிராக செயல்படவும் முயற்சிப்பார்கள். அவர் இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றக் கூடாது, குறிப்பாக கைகலப்பில் ஈடுபடவே கூடாது. இதில் அவரது தவறுதான் என்று நான் கூறவில்லை."
"ஒருவேளை இலங்கை வீரர்கள் அவரிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருக்கலாம். ஆனால், என்ன நடந்தாலும் கைகலப்பில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது. தவறான காரணங்களுக்காக நீங்கள் செய்திகளில் இடம்பெற விரும்ப மாட்டீர்கள். அவர் பல இளம் வீரர்களுக்கு முன்மாதரியாக இருக்கிறார், எனவே இதையெல்லாம் அவர் கவனிக்க வேண்டும். அனுபவத்தின் மூலம் அவர் இதைக் கற்றுக்கொள்வார்," என்று ஜாபர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
சச்சினை பார்த்து கற்று கொள்ளுங்கள்
இளம் வயதிலேயே கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரும் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் அமைதியாக இருந்தார் என்பதை ஜாபர் சுட்டிக்காட்டினார். மேலும், வைபவின் பெற்றோரும் பயிற்சியாளர்களும் இது குறித்து அவரிடம் பேசியிருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"அவர் தனது கோபத்தை சற்றே கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இவ்வளவு சீக்கிரமாக ஆத்திரப்படக் கூடாது. உங்களுக்கு சச்சின் போன்ற சிறந்த முன்மாதிரிகள் இருக்கிறார்கள், அவரும் இதே போன்ற ஒரு பயணத்தைத்தான் தொடங்கினார். சச்சினிடம் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நீங்கள் எப்போதும் பார்த்திருக்க முடியாது. வைபவ் மிக விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர், அவருடன் இருக்கும் பயிற்சியாளர்களும் பெற்றோர்களும் கண்டிப்பாக அவரிடம் இது குறித்துப் பேசுவார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று ஜாபர் கூறினார்.
"நீங்கள் வரம்பை மீறி தனிப்பட்ட முறையில் தாக்காத வரை, இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கவைதான். போட்டி மிகத் தீவிரமாக நடைபெறும்போது, இத்தகைய சில சம்பவங்கள் இருக்கத்தான் செய்யும். இது உங்கள் திறமையுடன் மன வலிமையையும் சோதிக்கும். ஆனால், எல்லையை ஒருபோதும் தாண்டக் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்தத் தொடரில் சூர்யவன்ஷி சில போட்டிகளில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ள போதிலும், இன்னும் ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடவில்லை. அவர் விளையாடிய நான்கு போட்டிகளில் 29.25 சராசரியிலும் 153.94 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 117 ரன்கள் எடுத்துள்ளார்.இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஏ அணி, இலங்கை ஏ அல்லது ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்ளும்.