பா.ம.க.,வுடன் விஜய் திடீர் நெருக்கம்!
சென்னை: பா.ம.க.,வுடன் முதல்வர் விஜய் திடீர் நெருக்கம் காட்டுவதற்கு, த.வெ.க., அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தரும் குடைச்சல்களே காரணம் என்று கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதில், காங்கிரசும், முஸ்லிம் லீக்கும், த.வெ.க.,வுடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகின்றன.
தலையீடு ஆனால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி.க.,வும் பல்வேறு பிரச்னைகளில், த.வெ.க., அரசை நேரடியாகவே விமர்சித்து வருகின்றன. அரசு நிர்வாகம், அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில், வி.சி.க.,வின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற நெருக்கடியையும், குடைச்சல்களையும் தவிர்க்கவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை விரிக்கப்பட்டது. அதில், இதுவரை ஐந்து பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்; நான்கு பேர் த.வெ.க.,வில் சேர்ந்து விட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், 'குதிரை பேரம்' என்றும் எதிர்க்கட்சிகளை போன்றே விமர்சித்து உள்ளன.
இது, முதல்வர் விஜய்க்கும், த.வெ.க.,வுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அமைச்சரவையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவோம்' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறியதும், த.வெ.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் நேற்று பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம், ''மக்கள் மீது சுமைகளை ஏற்றாமல், அரசுக்கான வருவாயை திரட்டுவது எப்படி என்பது பற்றி த.வெ.க., அரசு சிந்திக்க வேண்டும்.
''அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விரும்பியே ராஜினாமா செய்திருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதிக்காத அவர்களை, த.வெ.க.,வில் சேர்த்திருக்கக் கூடாது. இதுபோன்ற ஆரோக்கியமற்ற அரசியலை ஊக்குவிக்கக்கூடாது,'' என்றார்.
விமர்சனம் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரனை த.வெ.க.,வில் சேர்த்ததால் கோபம்அடைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களும், பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்னைகளில் இந்த அரசை விமர்சித்து வருகின்றனர்.
இதனால், நான்கு எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பா.ம.க.,வுடன், த.வெ.க., திடீர் நெருக்கம் காட்டி வருகிறது. முதல்வரான பின், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த விஜய், பா.ம.க., தலைவர் அன்பு மணியை அவரது வீட்டில் சந்தித்தார்.
அதன்பின், ஜாதிவாரி சர்வே நடத்தக்கோரி, பா.ம.க., நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், த.வெ.க.,வும் பங்கேற்றது. அனைத்து கட்சி கூட்ட தீர்மானத்தை அளிப்பதற்காக, முதல்வர் விஜயை, அன்புமணி நேரில் சந்தித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, 'தமிழக அரசின் சார்பில் சமூக நீதி சர்வே நடத்தப்படும்' என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, நேற்று முன்தினம், முதல்வர் விஜயை, பா.ம.க., - எம்.எல்.ஏ.,வும், அன்புமணி மனைவியுமான சவுமியா சந்தித்தார்.
அப்போது, 'காவிரி மேகதாது அணை விவகாரம் பற்றி, சட்டசபையில் சிறப்பாக பேசினீர்கள்' என சவுமியாவை, விஜய் பாராட்டினார். இது, அன்புமணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இது தொடர்பாக, த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2016ல், அன்புமணிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி தான், த.வெ.க.,வுக்கும் பணியாற்றினார். இவர் வாயிலாக ஏற்கனவே, அன்புமணிக்கும், விஜய்க்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது.
முக்கியத்துவம் இப்போது வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், பா.ம.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும் என முதல்வர் விஜய் நம்புகிறார்.
அதனால் தான், பா.ம.க.,வுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 2014 முதல் பா.ஜ., கூட்டணியில் இருந்தாலும், மத்திய அமைச்சர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் உள்ள அன்புமணி தரப்பும் த.வெ.க., நெருக்கத்தை விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.