மின்வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்: சமாதானம் பேசிய இசக்கி சுப்பையா விரட்டியடிப்பு
மின்வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்: சமாதானம் பேசிய இசக்கி சுப்பையா விரட்டியடிப்பு
நெல்லை: அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விகேபுரம் நகராட்சி 1வது வார்டு பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து முதலியார்பட்டியில் நேற்று முன்தினம் பொதுமக்களுடன் அதிமுகவினர் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அவர் தொகுதி மக்களின் நன்மைக்காகவே தான் தவெகவுக்கு சென்றதாக கூறினார். ஆனால் கூட்டத்தில் இருந்த அதிமுகவினர் இசக்கி சுப்பையாவை திரும்பிப் போ, திரும்பிப் போ என்று கூச்சலிட்டனர். மேலும், நாங்கள் மின்வாரிய அதிகாரிகளை தான் அழைத்தோம். இவரை யாரும் அழைக்கவில்லை எனக் கூறி, இசக்கி சுப்பையாவே திரும்பிப் போ என்றனர்.
அதற்கு அவர், சும்மா சீன் போடுகிறீர்களா எனக்கேள்வி எழுப்ப, நாங்கள் உங்களுக்கு தான் ஓட்டு போட்டோம் என்றனர். பெண்கள் சிலர் இங்கு ஏன் வந்தீர்கள் என எதிர் கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பை டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைய செய்தனர்.