இரட்டை கதிரே! மெக்குல்லத்துடன் இங்கிலாந்து அணியில் இணைந்த பீட்டர்சன்.. இனி சரவெடி தான்!
இரட்டை கதிரே! மெக்குல்லத்துடன் இங்கிலாந்து அணியில் இணைந்த பீட்டர்சன்.. இனி சரவெடி தான்!
மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து ஆடவர் வெள்ளை-பந்து கிரிக்கெட் அணிகளுக்கான 'சிறப்பு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 உலகக் கோப்பை தொடருக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமின் உதவிப் பணியாளர்கள் குழுவில் இணையவுள்ளார். இக்குழுவில் ஏற்கனவே மார்கஸ் ட்ரெஸ்கோத்திக், டிம் சவுதி, ஜீதன் படேல் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் உள்ளனர். இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் வெள்ளை-பந்து தொடரிலிருந்து பீட்டர்சன் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான கசப்பான விலகலுக்குப் பிறகு, சுமார் 12 ஆண்டுகள் கழித்து பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியின் உடைமாற்றும் அறைக்குத் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
173 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பீட்டர்சன், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் மற்றும் அவரது சொந்த நாடான தென்னாப்பிரிக்கா பற்றிய அவரது புரிதல் ஆகியவற்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
இது குறித்து பிரெண்டன் மெக்கல்லம் வெளியிட்ட அறிக்கையில், "கெவின் பீட்டர்சன் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இத்தகைய அனுபவமும் தகுதியும் வாய்ந்த ஒருவர் இந்த அணியோடு இணைந்து செயல்பட முன்வந்திருப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம்.
குறிப்பாக நமது பேட்டர்கள் அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பை வழங்க என்ன தேவை என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள கெவின் பீட்டர்சன், "தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் இந்த அணிக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து சீருடையை அணிவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் மற்றும் உணர்வுபூர்வமான தருணம்.
எங்களிடம் திறமையான வெள்ளை-பந்து கிரிக்கெட் அணி உள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு பிரெண்டனின் ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.