இந்திய ஒருநாள்,டி20 அணிக்கு திரும்பி வர ரிஷப் பண்ட் என்ன செய்யனும்? பேட்டிங் வரிசை என்ன? வசீம் ஜாபர்
இந்திய ஒருநாள்,டி20 அணிக்கு திரும்பி வர ரிஷப் பண்ட் என்ன செய்யனும்? பேட்டிங் வரிசை என்ன? வசீம் ஜாபர்
மும்பை: IPL 2027 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் 4-வது வரிசையில் களம் இறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் 2025 மற்றும் 2026 சீசன்களைக் கழித்த பிறகு, பண்ட் ₹15 கோடிக்கு தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
எல்எஸ்ஜி அணியில் பண்ட்டின் பயணம் சவாலானதாக இருந்தது, ஏனெனில் அந்த இரு சீசன்களிலும் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த இரண்டு சீசன்களில் 26 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான பண்ட், 135.75 ஸ்டிரைக் ரேட் மற்றும் 26.41 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 581 ரன்கள் எடுத்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் டந்த விவாதத்தின் போது பேசிய ஜாபர், "அவருக்கு 4-வது வரிசையே சிறந்த இடம் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இந்த இடத்தில் அவரது ஐபிஎல் புள்ளிவிவரங்கள் மிகச் சிறப்பாக உள்ளன. நீண்ட காலமாக 4-வது வரிசையில் விளையாடிய வீரர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ரிஷப் பண்ட்டின் புள்ளிவிவரங்கள் மிகச்சிறந்தவை."
"அவர் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கியுள்ளார், 3-வது வரிசையிலும் விளையாடியுள்ளார், ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 4-வது வரிசை அவருக்கு மிகவும் பொருத்தமானது. அவர் ஆரம்பத்தில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப தனது இன்னிங்ஸை நகர்த்த முடியும்."
ரிஷப் பண்ட் இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3,865 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4-வது வரிசையில் மட்டும் 2,109 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் அவரது சராசரி 34.57 மற்றும் ஸ்டிரைக் ரேட் 145.15 ஆகும், இதில் 10 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
"அவர் மீண்டும் அணிக்கு திரும்ப எளிதான வழி, டெல்லி அணிக்காக விளையாடி, விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக செயல்படுவதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக, மிகச் சிறந்த ஐபிஎல் சீசனை அவர் கொண்டிருக்க வேண்டும். இஷான் கிஷன் செய்தது போல, இந்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணிக்கு திரும்புவதற்கான கதவுகள் அவருக்கு திறக்கும் என்று நான் நினைக்கிறேன்."
"அவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அவர் மீண்டும் அணிக்குள் நுழைய முடியும், ஆனால் குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக அவர் ஒரு மிகச்சிறந்த சீசனை வெளிப்படுத்த வேண்டும்."
ரிஷப் பண்ட் இதுவரை இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மொத்தம் 107 போட்டிகளில் விளையாடி, 26.66 சராசரியுடன் 2,080 ரன்கள் எடுத்துள்ளார். இதில் எட்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.