இந்திய ஒருநாள் அணியில் பெரும் குழப்பம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித் தேர்வில் உள்ள சிக்கல் என்ன?
இந்திய ஒருநாள் அணியில் பெரும் குழப்பம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித் தேர்வில் உள்ள சிக்கல் என்ன?
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த தொடர் நடைபெறும் அதே நேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரும் நடப்பதால் பல ஒருநாள் அணி வீரர்கள் இந்திய டி20 அணியில் இணைந்து ஜப்பான் செல்ல உள்ளனர். அதனால் ஒருநாள் அணித் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வரும் 2027 உலகக் கோப்பை வரை அகர்கரின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 27 அன்று திருவனந்தபுரத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.
இந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்ப அதிக வாய்ப்புள்ளது. இஷான் கிஷன் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குச் செல்வதால், கே.எல்.ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராகவும், கேப்டன் சுப்மன் கில்லுக்கு துணையாக துணை கேப்டனாகவும் செயல்படுவார். ரோஹித் சர்மா, விராட் கோலி உடன் ருதுராஜ் கெய்க்வாட் 4-வது வரிசையிலும், ரஜத் படிதார் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று வீரர்களாகவும் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
காயத்தில் இருந்து மீண்டு வரும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 50 ஓவர் போட்டியில் முழுமையாகப் பந்துவீசத் தயாரா என்பதைப் பொறுத்தே அவரது தேர்வு அமையும். நிதிஷ் குமார் ரெட்டி ஆசிய போட்டிக்குச் செல்வதாலும், வெங்கடேஷ் ஐயர் காயமடைந்துள்ளதாலும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இடத்தில் யாரை ஆட வைப்பது என்ற சிக்கல் எழுந்துள்ளது.
சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல் ஆசிய போட்டிக்குச் செல்வதால், ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் ஓய்வுக்குப் பின் முகமது சிராஜ் மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். அவருடன் பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இடம்பெறுவர். பும்ராவுக்கு ஆசிய போட்டி காரணமாக ஓய்வளிக்கப்படும் நிலையில், முகமது ஷமி மற்றும் சஹால் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.