சுப்மன் கில் விலகல்? புதிய ஒருநாள் அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து தொடரில் முக்கிய மாற்றம்
சுப்மன் கில் விலகல்? புதிய ஒருநாள் அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து தொடரில் முக்கிய மாற்றம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளுக்கு போதிய பயிற்சி எடுக்கும் நோக்கில், கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியை வழிநடத்துவார் எனத் தெரிகிறது.
இந்தச் சுற்றுப்பயணம் அக்டோபர் 22 அன்று டி20 தொடருடன் தொடங்குகிறது. தொடர்ந்து நவம்பர் 4 முதல் ஒருநாள் போட்டிகளும், நவம்பர் 19 அன்று வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளன. கடைசி ஒருநாள் போட்டிக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையே வெறும் 4 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. மேலும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக எந்தவித பயிற்சிப் போட்டியும் அட்டவணையில் இல்லை.
இதனால் சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சிக்கு மாறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்காக அவர்கள் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி, முன்கூட்டியே வெலிங்டன் சென்று டெஸ்ட் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதற்காக பயிற்சியாளர் குழுவையும் இரண்டாகப் பிரிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான 4 பயிற்சியாளர்களில் இருவர் ஒருநாள் அணியுடனும், மற்ற இருவர் டெஸ்ட் வீரர்களுடனும் இணைந்து செயல்படுவர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். ஒருநாள் அணியின் துணை கேப்டனாக கே எல் ராகுல் இருந்தாலும் அவரும் டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டி சென்று விடுவார் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒருநாள் அணியை வழிநடத்தும் பொறுப்பு கிடைக்க உள்ளது.