📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 12:32 PM

சங்கராபுரம் MLA அலுவலகத்தை திறந்து வைக்கும் சி.வி; இபிஎஸ் படம் இல்லாத அழைப்பிதழ்

சங்கராபுரம் MLA அலுவலகத்தை திறந்து வைக்கும் சி.வி; இபிஎஸ் படம் இல்லாத அழைப்பிதழ்

சங்கராபுரம் MLA அலுவலகத்தை திறந்து வைக்கும் சி.வி; இபிஎஸ் படம் இல்லாத அழைப்பிதழ் - தொடரும் சலசலப்பு!

சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வு மீண்டும் அந்த விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜேஷின் புதிய அலுவலகம் நாளை காலை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ்தான் தற்போது அதிமுக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொதுவாக அதிமுக சார்பில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறுவது வழக்கம். ஆனால், சங்கராபுரம் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்காக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதுவே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீப காலமாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மறைமுகமாக விமர்சித்து வரும் சி.வி. சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் வட மாவட்டங்களின் பங்களிப்பால் கிடைத்தவை என்றும், அதற்கு பாமக கூட்டணியின் வாக்கு வங்கி முக்கிய காரணம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இந்த வெற்றி முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் கிடைத்ததல்ல என்ற வகையிலும் அவர் பேசியருந்தார்.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள சங்கராபுரம் நிகழ்ச்சி அழைப்பிதழ், சி.வி. சண்முகத்தின் அரசியல் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக சிலர் கருதுகின்றனர். அதிமுகவில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகிகள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள், சி.வி. சண்முகத்தின் கருத்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு அந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கட்சிக்குள் உருவாகி வரும் இந்த மோதல் எதிர்காலத்தில் எந்த வடிவத்தை எடுக்கும் என்பதும், அதிமுக தலைமை இந்த விவகாரத்தை எவ்வாறு அணுகப் போகிறது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.