"சக மனிதனை இப்படி கேவலமாக நடத்தக்கூடாது..".. பாகிஸ்தானை விளாசிய ஹோல்டிங்.. இம்ரான் கானுக்கு ஆதரவு
"சக மனிதனை இப்படி கேவலமாக நடத்தக்கூடாது..".. பாகிஸ்தானை விளாசிய ஹோல்டிங்.. இம்ரான் கானுக்கு ஆதரவு
லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவானும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிராக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த 2023 முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்க பாகிஸ்தான் அரசு மறுப்பதாகவும் அவரது மகன்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானை மனிதநேயத்துடன் மரியாதையாக நடத்தக் கோரி சர்வதேச கிரிக்கெட்டின் 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர். முன்னாள் இந்திய அணி கேப்டன்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி ஆகியோரும் அதில் கையெழுத்திட்டு இருந்தனர்.
இந்த கடிதத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள மைக்கேல் ஹோல்டிங், பாகிஸ்தான் அரசை ஆவேசமாகச் சாடியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "முன்னாள் கேப்டன்கள் எழுதிய கடிதத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஒரு சக மனிதனை இப்படி கேவலமாக நடத்தக் கூடாது. கொலைக் குற்றம் செய்தவர்களைக் கூட சிறையில் இப்படி நடத்த மாட்டார்கள். இம்ரான் கானை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடத்துவது முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.
முன்னதாக லண்டனில் இம்ரான் கான் புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக நிதி திரட்டியபோது அவருடன் இணைந்து செயல்பட்ட நினைவுகளைப் பகிர்ந்த ஹோல்டிங், "இம்ரான் கான் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உலக அளவில் இம்ரான் கானை விடப் புகழ்பெற்ற ஒரு பாகிஸ்தானியர் யாரும் இருக்க முடியாது. அவர் மீதுள்ள பொறாமை காரணமாகவே அவர் இவ்வாறு வஞ்சிக்கப்படுகிறாரா என்று தெரியவில்லை" என்று வேதனை தெரிவித்தார்.
உலகளவில் பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் ஜாம்பவான்கள் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் நிலையில், மைக்கேல் ஹோல்டிங்கின் இந்த காட்டமான கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.