📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 07:31 PM

அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - வேளாண்மை துறை அமைச்சர் தொகுதியில் அவலம்!

கும்பகோணம் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்காததால் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. வேளாண்மை துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் இந்த அவலம் நிகழ்ந்திருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் பட்டீஸ்வரம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 30,000 மெட்ரிக் டன் வரை சேமித்து வைக்கக்கூடிய அந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், தற்போது 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்படாமல் பல மாதங்களாக தேக்கி வைத்துள்ளதால் தார்ப்பாய்கள் கிழிந்து காணப்பட்டன. அத்துடன் தார்ப்பாய் பற்றாக்குறையால் பெரும்பாலான நெல் மூட்டைகள் மூடி வைக்கப்படாமல் இருந்தன. இதனால் சாக்குகள் கிழிந்து நெல் மணிகள் தரையில் கொட்டி குவிந்து கிடந்தன. அதிகாரிகளும், அதன் ஊழியர்களும் நெல் மூட்டைகளை காப்பதில் மெத்தனமாக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கும்பகோணத்தில் 11 சென்டி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு முழுவதும் மழைநீர் சூழ்ந்து நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி கிடக்கின்றன. மழையில் நனைந்ததால் சுமார் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சாவூர் நெல் சேமிப்பு கிடங்கு அதிகாரியிடம் கேட்டால், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி கிடப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக சொல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்தின் சொந்த தொகுதி கும்பகோணம். அவர் மழையில் நனைந்து சேதம் அடைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டு மாற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மும்முரம் காட்டி வருகிறார் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.