ஐரோப்பாவின் விதிமுறைகளால் ஏஐ தீங்குகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூருக்குக் கூடுதல் வாய்ப்பு
செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான சாட்ஜிபிடி, இணைய விளையாட்டான ‘ரோப்லாக்ஸ்’, செய்தித் தளமான ரெடிட் ஆகியவற்றை தங்களது மிகக் கடுமையான விதிகளின்கீழ் கொண்டு வருவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது, அத்தகைய தளங்கள் ஏற்படுத்தும் சாத்தியமான தீங்குகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூருக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறார் ஆபாசம், சூதாட்டம் போன்ற வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களுக்கு வயதுக் கட்டுப்பாடுகளைச் சேர்ப்பது, தீங்கு விளைவிக்கும் தகவல்களின் அபாயத்தைக் குறைக்க குழந்தைகளுக்கு உள்ளடக்கங்களைப் பரிந்துரைக்கும் முறையை மாற்றுவது ஆகியவை ஐரோப்பிய விதிகளில் அடங்கும்.
குழந்தைகள், பதின்ம வயதினரை இணையம் வழியாக அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்புகொள்வதைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
“சிங்கப்பூரிலும் இதேபோன்ற நடவடிக்கைகளைக் கட்டாயமாக்குவது இதன் மூலம் எளிதாகிறது,” என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யோங் புங் ஹாவ் சட்டக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் டிர்க் ஹார்டுங் கூறினார்.
அமெரிக்காவில் ஏற்படும் மாற்றங்களும் வழிகாட்டிகளாக அமைகின்றன என்று வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் குழந்தைகள், பதின்ம வயதினரின் தினசரி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் இரவில் குழந்தைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சேர்க்க அதன் நிறுவனமான மெட்டா ஒப்புக்கொண்டது.
“வயதை உறுதிப்படுத்தவும் தீங்கு விளைவிக்கக்கூடிய வடிவமைப்பு அம்சங்கள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகள் பரிசீலிக்கின்றன அல்லது அமல்படுத்தப்படும் நடவடிக்கைகளால் சிங்கப்பூரின் சொந்த ஒழுங்குமுறை அணுகுமுறைக்கு வழிகாட்டக் கூடிய பயனுள்ள வாய்ப்புகளை வழங்குகின்றன,” என்று ‘ராஜா & டான்’ சிங்கப்பூர் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞரும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளருமான பென் செஸ்டர் சியோங் கூறினார்.
இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களது அமைப்புகளால் ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிட்டு தணிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது. அதேபோல் சிங்கப்பூரிலும், குறிப்பிட்ட சமூக ஊடகச் சேவைகள், பயனாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தகவல்களைப் பார்ப்பதைக் குறைப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
வயது சரிபார்ப்பு உட்பட குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சிங்கப்பூரிலும் ஏற்கெனவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்நேரத்தில் செயற்கை நுண்ணறிவுகளால் போலிச் செய்திகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்பதையும் யுவன் லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சாமுவேல் யுவன் நினைவூட்டியுள்ளார்.